தலையங்கம்

நிரந்தரப் புரட்சி(Edit)

இந்தியாவிலே தகவல் உரிமை பெறும் சட்டம் கொண்டு வர‌ப் பட்டபோது, அது புதியதாய் இருந்தது. யார் வேண்டுமானாலும், எவ்வித அரசுத் துறையிடமும் எல்லாத் தகவல்களையும் பெறும் வசதியை இது அளித்தது. சாதாரண மனிதனை ஆற்றலுடையவனாக்கியது இச்சட்டம். ஆனால் அதைப் பயன் படுத்த முயன்ற சாதாரண மனிதர்களின் நிலை என்னவாயிற்று?

சென்னை கொளத்தூரில் தனக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தை சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமப்புச் செய்ததைப் பற்றி, தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் வினவியிருந்தார் 38 வயது புவனேசுவரன். 2012் சனவரி 10ம் தேதி, அவர் தனது இரு சக்கர வாகனத்தில் போகும்போது பட்டப் பகலில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.

2011 ஆகஸ்டு 16ம் தேதி, அன்னா அசாரேவின் இயக்கப் பணியாளரும், பற்பல அநீதிகளைத் தட்டிக்கேட்டு தகவல் மனுக்களைத் தாக்கல் செய்தவரும் ஆன ஷீலா மசூத் என்னும் 35 வயதுப் பெண் பட்டப் பகலில் பீகாரில் சுட்டுக் கொல்லப் பட்டார். அவர் அதற்கு முன் தினம்தான் தன் முகநூலில் "பண்பட்ட ஒத்துழையாமையின் நோக்கம் தூண்டுதலே" என்ற காந்தியின் வரிகளை எழுதியிருந்தார்.

காஞ்சீபுரத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் நடக்கும் ஊழல்களைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து மனுச் செய்த பாலசுப்ரமணியன் என்னும் 68 வயது மனிதர் 2010, ஆகஸ்டு 10ம் தேதி சலையின் ஓரத்தில் இறந்து கிடந்தார். ஆகஸ்டு 14, 2011 அன்று "தி இந்து" நாளிதழ், அந்த வருடம் மட்டும் 8 தகவல் உரிமைச் சட்டத் தன்னார்வலர்கள் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது.

இன்று வரை இவ்வகைத் தன்னார்வலர்கள் இந்தியாவில் நூற்றுக்கும் மேல் கொல்லப் பட்டுள்ளனர். சென்ற வாரம் சென்னையில் அத்து மீறிக் கட்டப் பட்ட கட்டடங்களைக் கேள்வி கேட்ட பர‌ஸ்மல் என்பவர் பட்டப் பகலில் கடைத் தெருவில் வெட்டிக் கொல்லப் பட்டார். இவ்வளவு கொலைகளிலும் யாரேனும் இதுவரை தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

"நாங்கள் சட்டங்களை மீறிச் சுரண்டுவோம். பொதுப் பணத்தைத் திருடுவோம். ஆக்கிரமிப்போம். எதிர்த்தால் கொலையும் எளிதாய்ச் செய்வோம். யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அரசியல்வாதிகளும், அரசுத்துறை பெரும் அதிகாரிகளும் வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கி விட்டனர். சாதாரண மனிதர்களான நாம் எவ்வளவுதான் சிறுமை கண்டு பொங்கினாலும் உயிருக்கும், குடும்பத்திற்கும் அஞ்சி அமைதியாக இருக்க வேண்டியிருக்கிறது.

ரவுடிகளையும், தாதாக்களையும் என்கவுன்டர் என்ற பேரில் அரசு கொல்கிறது. உண்மையைச் சொல்வதானால், அநீதியைத் தட்டிக் கேட்பவர்கள் அதைவிட அதிகமாகக் கொல்லப் படுகிறார்கள். உண்மை என்பது சமூக விரோதமாகி விட்டது!

உலகிலேயே ஹோண்டுராஸ் நாடுதான் கொலைகளுக்கு அதிகம் பேர் பெற்றது. தன்னார்வலர்கள் மிக அதிக அளவில் கொல்லப்படுவது அந்நாட்டில்தான். அங்கு சட்டம் ஒழுங்கு மிகக் குறைவு என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால் நாமொன்றும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்று இந்தியா நிருப்பித்து வருகிறது. ஒவ்வொரு பத்தாண்டும் அதற்கும் முன் இருந்த பத்தாண்டுகளாஇ விட மிகவும் சீர் குலைந்து வருகிறது.

இதற்குத் தீர்வு ஏதும் தென்படவில்லை என்பதே கசப்பான உண்மை. அநீதியை எதிர்க்கும் நேர்மையான‌ அறப் போராளிகளும், கொள்கைகளில் தெளிவு இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இல்லாமல் சிதறி இருக்கிறார்கள். தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், அறம் பரப்பும் நல்லுள்ளங்களும் ஆங்காங்கே பாலைவனச் சோலைகள் போல் தனித்து இருக்கிறார்கள். அவர்களால்தான் இன்றளவும் வண்டி இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு பெரும் சமூகப் புரட்சி தேவை என்பது போல் தோன்றுகிறது. ஆனால் சரித்திரத்தைப் பார்த்தால் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பற்பல‌ புரட்சிகள் வந்து போயும் மனிதன் நிலை ஏதும் மாறவில்லை. எனவே தனிமனிதர்கள் இச்சமூகத்தில் இருந்து வெளியேறி தாமே தமக்கு விதிவகையாய்த் தெளிவுடன் இருந்தால் அவர்களது உடனடிச் சமூகம் மேம்படும். அது போன்ற தனிமனிதர்கள் நிறைய ஆனால் மொத்தச் சமூகம் மேம்படும். இதுவே நிர‌ந்தரத் தீர்வு


Powered by LionWiki. Last changed: 2016/06/13 04:47 Erase cookies Edit History